
அக்டோபர் மாதம் பிறக்கும் போது இருக்கக்கூடிய கிரகநிலை:
- லக்னம் - திருவாதிரை - 2ல் - மிதுனம்
- சூரியன் - ஹஸ்தம் - 1ல் - கன்னி
- சந்திரன் - ரோகினி - 4ல் - ரிஷபம்
- செவ்வாய் - திருஓணம் - 3ல் - மகரம்
- புதன் - சித்திரை - 2ல் - கன்னி
- குரு - விசாகம் - 3ல் - துலாம்
- சுக்கிரன் - விசாகம் - 1ல் - துலாம்
- சனி - மூலம் - 2ல் - தனுசு
- ராகு - பூசம் - 2ல் - கடகம்
- கேது - உத்திராடம் - 4ல் - மகரம்
மேஷம்
அதிரடிகளால் மற்றவர்களை கவர்ந்திழுக்கும் மேஷ ராசி அன்பர்களே, நீங்கள் ஈரமனதுடையவர். இந்த காலகட்டத்தில் ராசிநாதன் செவ்வாய் தொழில் கர்மஜீவன ஸ்தானத்தில் இருந்தாலும், வக்ர நிலையில் இருக்கிறார். ஆனாலும் ராசியை குருபகவான் பார்ப்பதால் நீங்கள் ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு உண்டாகும்.
சுபசெலவுகள் நேரலாம். ஆயுதங்களைக் கையாளும்போதும் வாகனங்களை ஓட்டும் போதும் எச்சரிக்கை அவசியம். அடுத்தவர்களுக்கு உதவப்போய் வீண் பழி ஏற்படலாம். உங்களைச் சார்ந்தவர்களே உங்களைத் தவறாக நினைக்கலாம். தொழில் ஸ்தானத்தை ராசிநாதன் அலங்கரிக்க, சூரியன், புதன் இருவரும் பார்க்கிறார்கள். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும்.
பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாடிக்கையாளர்களின் கருத்துகளுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும். வியாபார ஸ்தலத்திற்காக புதியதாக இடம் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். மேலதிகாரிகளிடம் உங்களது கருத்துகளை தெரிவிக்கும்போது கவனமாகப் பேசுவது நல்லது.
பணி நிமித்தமாக பயணங்கள் ஏற்படலாம். குடும்பாதிபதி சுக்கிரன் பலமிழந்து காணப்படுகிறார். குடும்பத்தில் நிம்மதி குறையலாம். கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் விஷயத்தில் கவனம் செலுத்துங்கள். உறவினர்கள் வருகை இருக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் பேசும்போது வார்த்தைகளைக் கோர்த்து பேசுவது முக்கியம்.
பெண்கள் சமையல் செய்யும்போது கவனம் தேவை. புதிய சேமிப்பு திட்டங்களில், யோசித்து, தேர்ந்தெடுத்து சேருங்கள். கலைத்துறையினர் திறமைக்கேற்ற வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று ரசிகர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இதுவரை நிலுவையிலிருந்த பணத்தொகைகளும் கைக்கு கிடைக்கும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும். சூரியனின் சஞ்சாரத்தால் அரசியல் துறையினருக்கு பெயர், புகழ், கௌரவம் யாவும் தேடி வரும்.
மக்களின் ஆதரவைப் பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. உங்கள் பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் உயரும். மாணவர்கள், கல்வியில் முன்னேற்றம் காண, கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக செல்லவேண்டியது மிகவும் அவசியம்.
பரிகாரம்: துர்க்கையம்மனை பூஜித்து வணங்க, எல்லா நன்மைகளும் உண்டாகும். மனத் துயரம் நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி
ரிஷபம்
கொடுத்த வாக்கை உயிருக்கு சமமாக மதிக்கும் ரிஷப ராசி அன்பர்களே, நீங்கள் கவர்ச்சிகரமான தோற்றம் கொண்டவர். இந்த காலகட்டத்தில் ராசிநாதன் பஞ்சம பூர்வ ஸ்தானத்தில் பலமிழந்திருந்தாலும், அவருடைய சார சஞ்சாரத்தால் நிம்மதி ஏற்படும். மனக்கலக்கம் நீங்கும். சிற்றின்ப செலவு அதிகரிக்கும்.
அஷ்டமத்து சனியால், காரணமே இல்லாமல் வீண்பழி சுமக்க நேரிடும். ஒதுங்கிச் சென்றாலும் வலிய வந்து சிலர் சண்டை போடலாம் கவனமாக இருப்பது நல்லது. கண் சம்பந்தமான கோளாறுகள் ஏற்படலாம். வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம். தொழில் ஸ்தானத்தை குரு பகவான் பார்க்கிறார். தொழில் வியாபாரத்தில் திடீர் போட்டி இருக்கும். வீண் வார்த்தைகள் பேசுவதை தவிர்ப்பது நல்லது. வாடிக்கையாளர்கள் மன நிறைவடைவதற்காக கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய நேரலாம். வேலை செய்யும் இடத்திலும் மேல் அதிகாரிகளிடமும் வீண் பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த பணி உயர்வு கிட்டும். குடும்பாதிபதி புதன் அனுகூலம் தரும் வகையில் சஞ்சரிக்கிறார்.
குடும்பத்தில் ஏதாவது வேண்டாத பிரச்னை தலை தூக்கலாம். உறவினர்கள், நண்பர்கள், சொந்தப் பிள்ளைகள் என்று யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அனுசரித்துச் செல்வது நல்லது. தாய்வழி உறவினர்களுடன் சஞ்சலம் ஏற்படலாம்.
சொத்து சார்ந்த விஷயங்கள் அனுகூலம் தரும். பெண்களுக்கு செய்யும் செயலில் திருப்தி இல்லாமல் போகலாம். அலுவலகத்தில் தேவையற்ற டென்ஷன் ஏற்படலாம். கலைத்துறையினருக்கு பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இலக்கியத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும்.
சக கலைஞர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். கலைப் பொருட்கள் விற்பனை செய்வோருக்கு லாபம் அதிகரிக்கும். அரசியல் துறையினர் தங்கள் விருப்பை மேலிடத்தில் சொல்வதற்கு ஏற்ற காலகட்டம். புதிய உத்திகளைக் கையாண்டு அசத்துவீர்கள். முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். மாணவர்களுக்கு உடல் சோர்வு உண்டாகலாம். வீண் அலைச்சலைத் தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.
பரிகாரம்: மல்லிகை மலரை சமர்ப்பித்து லட்சுமியை வழிபட கடன் பிரச்னை தீரும். செல்வநிலை உயரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வெள்ளி.
மிதுனம்
எந்தக் கடினமான சூழ்நிலைகளையும் நிதானமாகவும் புத்திசாதூர்யத்துடனும் அணுகும் மிதுன ராசி அன்பர்களே, நீங்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்வதில் கெட்டிக்காரர். பொறுமையுடன் இருந்து காரியங்களை சாதிப்பதில் வல்லவர். இந்த காலகட்டத்தில் ராசிநாதன் புதன் அனுகூலம் தரும் வகையில் சஞ்சரிக்கிறார். எதிலும் முன்னேற்றம் காணப்படும்.
எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உழைப்பு அதிகரிக்கும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். அடுத்தவருக்காக செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். பொருள் வரத்து அதிகரிக்கும். வாகனம், பூமி மூலம் லாபம் கிடைக்கும். தொழில் ஸ்தானாதிபதியான குரு, ராசியைப் பார்ப்பதும் தொழில் ஸ்தானத்தை சுக்கிரன் பார்ப்பதும், லாபம் தரும் அமைப்பாகும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். பல தடைகளைத் தாண்டி செயல்பட வேண்டி இருக்கும்.
எதிர்பார்த்த லாபம் வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஆர்டர்கள் கைக்கு வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து மோதல்கள் அகலும். குடும்பஸ்தானத்தில் இருக்கும் கிரக கூட்டணியால் குடும்பத்தில் இருந்த பிரச்னை குறையும்.
கணவன், மனைவி இருவரும் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து திருப்தியடைவீர்கள். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. நண்பர்கள் உறவினர்களிடம் இருந்து வந்த பிரச்னைகள் அகலும்.
பெண்கள் வழக்கத்தைவிட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொருள் வரத்து கூடும். பயணம் செல்ல நேரலாம். கலைத்துறையினருக்கு கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும். அரசியல் துறையினருக்கு பாராட்டு கிடைக்கும்.
மனக்கவலை ஏற்படும். உடல்சோர்வு உண்டாகும். ஆன்மிக நாட்டமும், மன தைரியமும் உங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். தொழில் முன்னேற்றம் காண, புதிய திட்டங்களைத்தீட்டுவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்க கூடிய சூழ்நிலை காணப்படும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றிபெற தடைகளைத்தாண்டி படிக்க வேண்டி இருக்கும். பெரியோரின் ஆலோசனைபடி செயல்படுவது நல்லது.
பரிகாரம்: பெருமாளை பூஜித்து வணங்கி வர, எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்.
கடகம்
முகவசீகரத்தின் மூலம் மற்றவர்களைக் கவரும் கடக ராசி அன்பர்களே, நீங்கள் உணர்வுபூர்வமான விஷயங்களில் நாட்டம் உடையவர். இந்த காலகட்டத்தில் ராசியில் இருக்கும் கிரக சேர்க்கையால் எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பணவரத்து கூடும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னை தீரும்.
நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் சாதகமாக இருக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். தொழில் ஸ்தானத்தை குரு பகவான் பார்க்கிறார். தொழில் ஸ்தானாதிபதியான செவ்வாய், ராசியை பார்க்கிறார். லாபாதிபதி சுக்கிரன் பாக்கியஸ்தானத்தை பார்க்கிறார்.
தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். வாக்கு வன்மையால் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். தடைப்பட்ட ஆர்டர்கள் வந்து சேரும். அரசாங்க ரீதியில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி புதிய பொறுப்புகள் ஏற்படலாம்.
மேலதிகாரிகள் கொடுத்த வேலையை செய்து முடித்து அவர்களின் நன்மதிப்புக்கு ஆளாவீர்கள். பணி சார்ந்த விஷயமாக குடும்பத்தை விட்டுப்பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை வரலாம்.
குடும்பாதிபதி சூரியன் ஆட்சியாக இருக்கிறார். குடும்பத்தில் மகிழ்ச்சியான சுபகாரியங்கள் கொண்டாட்டங்கள் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கப் பெறுவீர்கள்.
பெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும். சகோதரர்களிடம் கவனமாகப் பேசுவது நல்லது. உறவினர்கள் ஆதரவு இருக்கும். பெண்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து திருப்திகரமாக இருக்கும். கலைத்துறையினர் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும்.
சாதகமாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். அரசியல் துறையினர் மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம். மனதிற்குப் பிடித்தவர்களை சந்திக்க நேரிடலாம். பெரியவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும்.
உடனிருப்பவர்களுடன் எச்சரிக்கையாகப்பழகுவது நல்லது. ரகசியங்களை கையாளுவதில் கவனம் தேவை. மாணவர்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் மூலம் கல்வியில் முன்னேற்றம் காண உதவி கிடைக்கும்.
பரிகாரம்: துர்க்கைக்கு வேப்பிலையை சமர்ப்பித்து பூஜித்து வணங்க துன்பங்கள் நீங்கும். காரிய வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.
சிம்மம்
மனதில் திடமும், கொண்ட கொள்கையில் மாறாத் தன்மையும் பெற்ற சிம்ம ராசி அன்பர்களே, நீங்கள் நினைத்த காரியத்தை கச்சிதமாக செய்வதில் வல்லவர்கள். இந்த காலகட்டத்தில் ராசிநாதன் சூரியன் ஆட்சியாக இருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல பலன்களை பெறும் அமைப்பில் இருக்கிறீர்கள். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகமாகும். தடைப்பட்டு வந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும்.
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழில் ஸ்தானாதிபதியான சுக்கிரன் தனஸ்தானத்தில் இருக்கிறார். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாட்கள் மூலம் நன்மை ஏற்படும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களிடம் நன் மதிப்பை பெறுவீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக, சிறப்பாக பணிகளை செய்து மேல் அதிகாரிகளிடம் பாராட்டுக்கள் கிடைக்கப் பெறுவார்கள். உயர் பதவிகளும் கிடைக்கக் கூடும். சக பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். எல்லா வகையிலும் நன்மை ஏற்படும்.
கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பிள்ளைகள் நீங்கள் கூறியதை கேட்டு அதன்படி நடப்பது ஆறுதலை தரும். நண்பர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சுமுகமாக நடந்து முடியும். பெண்களுக்கு தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தடைப்பட்ட காரியங்கள் சாதகமாக முடியும். பணவரத்து அதிகரிக்கும்.
கலைத்துறையினருக்கு ஒப்பந்தங்கள் எடுப்பதில் கவனம் தேவை. லாபம் உண்டாகும். கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். சிறு சிக்கல்கள் ஏற்பட்டு மறையும். கவனத்துடன் செயல்பட்டால் சிக்கல்களைத் தவிர்க்கலாம். சின்னச் சின்ன செலவுகளை சந்திக்க நேரிடலாம். உழைப்பிற்கான ஊதியம் சற்று குறைவாக கிடைக்கலாம். மன தைரியத்தால் வெற்றி காண்பீர்கள்.
அரசியல் துறையினர், அதீத கவனத்துடன் செயல்பட்டால் அது பதவி உயர்வு மற்றும் வெற்றியைத் தேடித்தரும். எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும். லட்சியங்கள் கைகூடும். மனதிற்கு நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். நிதானம் தேவை. மாணவர்கள் கல்வியில் இருந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் காண்பீர்கள். பெற்றோர், ஆசிரியர் பாராட்டும் கிடைக்கும்.
பரிகாரம்: சிவனையும், நந்தீஸ்வரரையும் வணங்க எல்லா பிரச்னைகளும் சுமுகமாக முடியும். குடும்பத்தில் அமைதி ஏற்படும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி.
கன்னி
வாழ்க்கையில் முன்னேற அனைத்து விதமான நடவடிக்கைகளையும் சோம்பலின்றி செய்யும் கன்னி ராசி அன்பர்களே, நீங்கள் அதிக நினைவுத்திறனும், எதையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் உடையவர். இந்த காலகட்டத்தில் ராசியில் சுக்கிரன் இருக்கிறார். ராசிநாதன் புதன் லாபஸ்தானத்தில் ராகுவுடன் இணைந்திருக்கிறார். நல்ல பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.
முயற்சிகள் வெற்றி பெறும். எதையும் ஆராய்ந்து, முடிவுகளை எடுப்பது நல்லது. வேகத்தைக் குறைத்து, விவேகமுடன் செயல்படுவது நன்மை தரும். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனத்துடன் வைப்பது நல்லது. பணவரத்து அதிகமாகும். பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் ஸ்தானத்தை சனி பகவான் பார்க்கிறார். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும்.
பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்பட்டாலும் வந்து சேர்வதில் எந்தத்தடையும் இருக்காது. எந்த ஒரு வேலையையும் அதிக முயற்சி செய்து முடிக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் பணியாற்றுவது நல்லது. புதிய வேலைக்கு செய்யும் முயற்சிகள் பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். கொடுத்த வேலைகளை சரியான நேரத்தில் செய்வது உகந்தது.
குடும்பாதிபதி சுக்கிரன் ராசியில் இருக்கிறார். குடும்பஸ்தானத்தை குரு பகவான் அலங்கரிக்கிறார். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்னைகள் குறையும். குழந்தைகளின் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். பெண்கள் எந்த ஒரு முடிவையும் எடுக்கும்போது ஒருமுறைக்குப் பலமுறை யோசிப்பது நல்லது.
மற்றவர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது அவசியம். கலைத்துறையினர், எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும்.
வாகன யோகம் உண்டாகும். ஆன்மிக தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். அரசியல் துறையினருக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். உற்சாகமாக எதையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்து கேளிக்கைகளில் பங்கு கொள்வீர்கள். கடன் பிரச்னை குறையும். வீண் அலைச்சல், வீண் பயம் குறையும். அடுத்தவர் செய்யும் இடையூறுகளையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் சாமர்த்தியத்தைப் பெறுவீர்கள். மாணவர்கள் கல்வி தொடர்பான விஷயங்களில் முடிவு எடுக்கும் போது தீர ஆலோசித்து செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளில் தாமதம் ஏற்படலாம்.
பரிகாரம்: ஐயப்பனை வணங்கி வர எல்லா பிரச்னைகளும் தீரும். மன நிம்மதி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி.
துலாம்
சமயோசிதமான அறிவினால் காரியங்களை செய்து வெற்றி பெறும் துலா ராசி அன்பர்களே, நீங்கள் அற்ப சிந்தனைகளுக்கு இடம் கொடாத, தீர்க்கமான எண்ணமுடையவர். இந்த காலகட்டத்தில் ராசிநாதனான சுக்கிரன், ராசிக்கு அயனசயன போக ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும், ராசியில் குரு இருப்பதால் எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். புத்திசாதூரியத்தால் எதையும் செய்து முடிக்க முடியும்.
அனுபவபூர்வமான அறிவுத்திறன் கை கொடுக்கும். பணவரத்து அதிகமாகும். மற்றவர்களுடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நன்மை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். தொழில் ஸ்தானத்தை புதனும், ராகுவும் இணைந்து அலங்கரிப்பது சிறப்பு. தொழில், வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும்.
பணவரத்து தாமதப்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாகப் பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகளை ஏற்க வேண்டியிருக்கும்.
செயல் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் திடீர் பிரச்னை தலை தூக்கும். மிகவும் கவனமாக அதைக் கையாண்டால் அது தீரும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். பிள்ளைகள் உங்கள் ஆலோசனையை கேட்காமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கலாம். உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாகப் பழகுவது நல்லது.
பெண்களுக்கு அனுபவபூர்வமான அறிவைக்கொண்டு எதையும் சாதிப்பீர்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். கலைத்துறையினருக்கு வாக்கு வன்மையால், தொழில் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பணிகள் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம்.
புத்தி சாதூரியத்தால் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அரசியல் துறையினர் நிதானமாகப் பேசுவது நன்மை தரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்பார்த்த தகவல்கள் வரும். மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்படியான காரியங்கள் நடக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்ற மடைய தேவையான உதவிகள் கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்.
பரிகாரம்: மாரியம்மனை வணங்கி வர,எதிர்ப்புகள் விலகும். காரிய வெற்றி உண்டாகும். மனமகிழ்ச்சி கூடும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.
விருச்சிகம்
ஓய்வறியாமல் உழைக்கும் திறன் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே, நீங்கள் மற்றவர்களுக்காக போராடும் குணமுடையவர். இந்த காலகட்டத்தில் காரியத்தடை, தாமதம் நீங்கும். வழக்கு விவகாரங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். எதிர்ப்புகள் விலகும். பொருளாதாரம் உயரும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தாமதமான காரியங்கள் வேகம் பிடிக்கும்.
வீண்கவலை விலகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். தொழில் ஸ்தானத்தை அதன் அதிபதி சூரியன் அலங்கரித்து ஆட்சி புரிகிறார். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னருடன் அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபார போட்டிகள் குறையும். எல்லா துறைகளிலும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவார்கள்.
வேலை பார்க்கும் இடத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். மேலதிகாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். சிலருக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். வாய்க்கு ருசியான உணவை உண்பீர்கள். கணவன் மனைவி இருவரும் ஒருவரது பேச்சை மற்றவர் கேட்பதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நட்பு ரீதியில் நிதானத்தைக் கடைபிடிப்பது நன்மையைத் தரும் பெண்கள் எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். தடைகள் விலகும்.
பணவரத்து திருப்தி தரும். கலைத்துறையினருக்கு ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். தொழில் திருப்திகரமாக நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக நடக்கும். முன்னேற்றம் காண்பார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.
அரசியல் துறையினருக்கு சந்தோஷமான நிலை காணப்படும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை விலகும். விளையாட்டு போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். விடுமுறையில் மகிழ்ச்சியான பொழுது போக்கில் ஈடுபடுவீர்கள்.
பரிகாரம்: குலதெய்வத்தை வணங்க எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி.
தனுசு
கடினமான சூழ்நிலையிலும் நேர்மை தவறாத தனுசு ராசி அன்பர்களே, நீங்கள் தடைகளை தகர்த்தெறிந்து முன்னேற்றம் காணும் திறமை உடையவர். இந்த காலகட்டத்தில் ராசியில் சனிபகவான் இருந்தாலும், ராசிநாதன் குரு லாபஸ்தானத்தில் இருக்கிறார். பலவகைகளிலும் நன்மை உண்டாகும்.
இழுபறியாக இருந்த சில வேலைகள் சாதகமாக நடந்து முடியும். பணவரத்து அதிகரிக்கும். தெளிவான முடிவு எடுப்பதன் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். கடினமான வேலைகள் கூட சுலபமாக முடியும்.தொழில் ஸ்தானத்தை சுக்கிரன் அலங்கரிக்கிறார். தொழில் வியாபாரத்தில் இருந்த பண தட்டுப்பாடு நீங்கும். வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும்.
வியாபாரம் தொடர்பான பயணங்களினால் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை குறையும். வர வேண்டிய பணம் வந்து சேரும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும்.
வாழ்க்கைத் துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. அடுத்தவர் செயல்கள் உங்கள் கோபத்தைத் தூண்டுவதாக இருக்கலாம். அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளிடம் கனிவாக நடந்து கொள்வது நல்லது. பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். கவுரவம் உயரும். மற்றவர்களிடம் நன்மதிப்பு உண்டாகும்.
கலைத்துறையினருக்கு விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். அரசியல்துறையினர் எந்த ஒரு விஷயத்திலும் வேகம் காட்டினாலும் அதே நேரத்தில் அதில் உள்ள நன்மை தீமைகள் பற்றி ஆலோசித்து முடிவு எடுப்பது அவசியமாகிறது.
காரியானுகூலம் உண்டாகும். காரியத் தடை, தாமதம் ஏற்படும். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் இழுபறியாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் காண்பீர்கள். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.
பரிகாரம்: முருகப்பெருமானை வணங்கிவர கஷ்டங்கள் தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பீர்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.
மகரம்
திடமுடிவும் தெளிவான சிந்தனையும் கொண்ட மகர ராசி அன்பர்களே, எடுத்துக் கொண்ட வேலையை சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள். இந்த காலகட்டத்தில் ராசியில் செவ்வாய்கேது இருவரின் சஞ்சாரம் அமைந்திருக்கிறது. எடுத்துக் கொண்ட காரியங்களில் தாமதமான போக்கு காணப்படும். உங்கள் வார்த்தைக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும்.
உங்கள் பேச்சை வெறும் பேச்சு போல் மற்றவர்கள் நினைப்பார்கள். அதனால் அளவுடன் பேசுவது நல்லது. உங்களது உடமைகளை கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. தொழில் ஸ்தானத்தை குரு அலங்கரிக்கிறார். தொழில், வியாபாரத்தில் வேகமான போக்கு காணப்படும். சரக்குகளை அனுப்பும்போதும் பாதுகாத்து வைக்கும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கிடப்பில் இருந்த கடன்கள் பைசலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது.
செய்யும் வேலை பற்றி மனதில் திருப்தியற்ற எண்ணம் உண்டாகும். குடும்ப ஸ்தானத்தை சூரியன் குரு இருவரும் பார்க்கிறார்கள். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்களுக்கு மனவருத்தத்தைத் தருவதாக இருக்கலாம். கவனமாகக் கையாள்வது நல்லது. பிள்ளைகளுடன் அனுசரித்துச் செல்வது நன்மையை தரும். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் அடையும்படியான சூழ்நிலை வரலாம் கவனம் தேவை. பெண்கள் தங்களுடைய பொருள்களை கவனமாக பாதுகாத்துக்கொள்வது நல்லது. வீண்பிரச்னைகளில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவது நன்மை தரும்.
கலைத்துறையினருக்கு இழுபறி நிலை மாறி, மனம் மகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும். தொழில் மந்தமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து இருக்கும். பணிகள் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். அரசியல் துறையினர் மேலிடத்தில் இருப்பவர்களிடம் இருந்து மனம் நோகும்படியான வார்த்தைகளை எதிர்கொள்ள நேரலாம்.
எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். பதவிகள் பற்றிய கவலை உண்டாகும். நிதானமாக செய்யும் செயல்கள் வெற்றியை தரும். மாணவர்களுக்கு கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நன்மை தரும். கவனமாக அடுத்தவர்களிடம் பழகுவது நல்லது.
பரிகாரம்: சனிபகவானை சனிக்கிழமையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது கவலையை போக்கும். வீண் அலைச்சல் குறையும். வேலைப்பளு நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.
கும்பம்
அயராத உழைப்பையும் தனித்தன்மையும் கொண்ட கும்ப ராசி அன்பர்களே, நீங்கள் பலனை எதிர்பார்க்காமல் உழைப்பவர், இந்த காலகட்டத்தில் ராசியை சூரியன் குரு இருவரும் பார்க்கிறார்கள். விரும்பிய இடமாற்றம் ஏற்படும். குறிக்கோளின்றி வீணாக அலைய நேரிடும். செலவும் அதிகரிக்கும். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும்.
மனோதைரியம் கூடும். புதிய நட்பு கிடைக்கும். எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மை தரும். தொழில் ஸ்தானாதிபதி செவ்வாய், விரயஸ்தானத்தில் வக்கிரமாக சஞ்சரிக்கிறார். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத தடங்கல்கள் வரலாம். பணவரத்து இருந்தாலும் தேவை அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். அவர்களால் நன்மையும் உண்டாகும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற வேகத்தில் பணிபுரிவார்கள். சிலர் புதிய பதவி அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். குடும்பஸ்தானத்தை சுக்கிரன் பார்க்கிறார். குடும்பத்தை விட்டு வெளியே சென்று தங்க நேரிடலாம். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும்.
விருந்தினர்கள் வருகை இருக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். பிள்ளைகளுடன் சந்தோஷமாக பொழுதைக் கழிப்பீர்கள். பெண்கள் அடுத்தவர்களின் வேலைக்காக வீணாக அலைய நேரிடும். மனோ தைரியம் அதிகரிக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. கலைத்துறையினர், எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. கஷ்டம் தீரும். பேச்சின் இனிமையால் காரியம் கைகூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. அரசியல் துறையினருக்கு எதிர்பார்த்த பண உதவி கிடைக்கலாம். மேலிடத்தை அனுசரித்துச் செல்வது நல்லது.
பணிகள் நிறைவடைய அலைய வேண்டி இருக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம். மாணவர்கள் கல்வியில் வெற்றிபெற முழுமூச்சாக பாடுபடுவீர்கள். புதிய நட்பு கிடைப்பதுடன் அவர்களது ஆலோசனையும் வெற்றிக்கு உதவும். ஆனால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.
பரிகாரம்: பெருமாளை தரிசித்து வணங்கி வர, எதிர்பார்த்த காரிய அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சீர்படும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்.
மீனம்
சமூக நோக்கமும், பரந்த மனப்பான்மையும் கொண்ட மீன ராசி அன்பர்களே, இந்த காலகட்டத்தில் ராசிநாதன் குரு மறைந்திருந்தாலும் ராசியை சுக்கிரன் பார்க்கிறார். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. திடீரென்று கோபம் வரும். ஏதாவது ஒருவகையில் அடுத்தவரிடம் வீண் பேச்சைக் கேட்க நேரலாம்.
மற்றவர்கள் செய்கைகளால் மனவருத்தம் உண்டாகலாம். நீண்டநாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்னை முடிவுக்கு வரும். தொழில் ஸ்தானத்தை சனி பகவான் அலங்கரிக்கிறார். தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த பின்தங்கிய நிலை மாறும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். வியாபார போட்டிகள், தடை, தாமதங்கள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவார்கள்.
பிடித்தமான இடத்திற்கு வேலை மாற்றம் உண்டாகும். சக ஊழியர்கள் நட்புடன் பழகுவார்கள். குடும்பத்தில் அமைதி குறைவது போல் தோன்றும் சகோதரர்கள் வழியில் ஏதாவது பிரச்னை தலைதூக்கலாம், கவனம் தேவை. பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். விருப்பமான நபரை சந்தித்து மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும்.
பெண்கள் வீண் பேச்சுகளைக் குறைத்து செயலில் கவனம் செலுத்துவது நல்லது. பணவரத்து திருப்தி தரும். கோபத்தைக் குறைப்பது நல்லது. கலைத்துறையினருக்கு சகஜநிலை காணப்படும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும்.
சக கலைஞர்களுடன் இருந்து வந்த இடைவெளி குறையும். ஆன்மிக பயணம் செல்லும் நிலை உருவாகும். மற்றவர்கள், ஆலோசனைகள் கேட்டு உங்களை நாடி வருவார்கள். உங்களை விட்டுப்பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள்.
அரசியல் துறையினருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. எல்லாவகையிலும் நல்லதே நடக்கும். பணவரத்து அதிகரிக்கும். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகும்.
பரிகாரம்: விநாயகப் பெருமானை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். மனக்கஷ்டம் தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி.